நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

08 April 2011

தேவதைகளா.. இல்லை அடிமைகளா?!





கண்விழிக்கும் போதே
காற்று போலாகி
என்னை தொலைக்கிறேன்
உருவமில்லா ஒன்றாய்..  
 
குப்பைகளை கூட்டுவதும்
மீண்டும் குவியும் அவைகளுக்காய்
கவலைப்படுவதுமாய்
மரத்து போகும் உணர்ச்சிகள்
 
என்னை சுட்ட பாத்திரங்கள்
சுடாத பாத்திரங்கள்
வரிசைப்படுத்தி பார்க்கிறேன்
எல்லாம் ஒன்றுபோலவே இருக்கின்றன..
 
என்ன உணவு இன்று?
எண்ணெயில் பொறித்ததா?
இல்லை.. அழுத்தத்தில் வெந்ததா?
எப்படி சமைத்தால் பிடிக்கும் என்னை?
 
கறைகளை வெளுத்தே
நகங்களை தொலைக்கிறேன்..
காந்திக்கு சொல்லவேண்டும்..
என் ஆயுதப்படை அவமானப்படுவதை..
 
வரவுசெலவில் மிச்சப்படும்
நாணயங்கள் புலம்புகின்றன
ஒளித்துவைக்க வேண்டாம் 
அவற்றின் உணர்சிகளை என்று  
 
தொலைக்காட்சி விளம்பரங்கள் கூட
என்னுடைய கடமைகளை உணர்த்திக்கொண்டே..
'சமர்த்துப்பொண்ணுடி  நீ!'
இது பக்கத்துவீட்டு மாமி..
 
செவ்வாய் வெள்ளி கணவனுக்காகவும்
வியாழன் பிள்ளைகள் படிப்புக்காகவும்
சனிக்கிழமை எண்ணெய் குளியலுக்கும்
ஞாயிறு மாவரைக்கவும், திங்கள் இட்லி சுடவும்.. 
 
எல்லாநாட்களும் அவர்களுக்காக என்றாலும்
அந்த மூன்று நாட்கள் 
எனக்கே எனக்காய்..
தொடரும் அவஸ்தைகள்..  
 
அவர்களுடைய தேடல்கள் எல்லாம்
புத்தகங்கள், அலுவலக கோப்புகள்,
சோப்பு, சீப்பு, கைக்குட்டை, சில்லறைகள்
அவ்வளவு தான்.. முடிந்துவிட்டது
 
அயராத கடமைகள் தொடர்ந்தாலும்
அடிமையாய் பலநேரம் உணர்ந்தாலும்
கனவுலகில் மட்டும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்
ஒரு தேவதையாய்..!!!

5 comments:

  1. அயராத கடமைகள் தொடர்ந்தாலும்
    அடிமையாய் பலநேரம் உணர்ந்தாலும்
    கனவுலகில் மட்டும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்
    ஒரு தேவதையாய்..!!!

    romba nalla iruku, nice....

    ReplyDelete
  2. முதல் மழை எனை நனைத்ததே...

    ReplyDelete
  3. அ. வெண்ணிலாவிற்குப்பிறகு பெண்களின் மாதாந்திர அவஸ்தை பற்றிய முக்கிய பதிவு

    ReplyDelete
  4. மிக்க நன்றி சுஜி! :)

    ReplyDelete
  5. தங்கள் வருகைக்கு நன்றி CPS :)
    வெண்ணிலா அவர்களின் பதிவோடு ஒப்பிட்டமைக்கும்
    மிக்க நன்றி..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...