நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

02 May 2011

என்னெதிரில் அவள்


காற்று பட்டதும்
உறங்கிவிடும் குழந்தையாய்
சட்டென்று உறங்கிவிட்டாள் 
என் மடி சாய்ந்து 
எத்தனை நாள் உறக்கத்தை 
உறங்குகிறாள் இன்று? 
இத்தனை அழகாய் அவளை 
கண்டதில்லை என்றும்
சுவர் ஓர புகைப்படத்தில்
கருப்பும் வெள்ளையுமான நிறத்தில்
ஒற்றை ரோஜாவுடன் 
சிரித்தபடி நிற்பது 
சத்தியமாய் அவள் தான்
அந்தச்சிரிப்பு தொலைக்கப்பட்டது  
என்னால் தான்..

நான் அறியா 
அவளின் துன்பங்களை போல்
நோயும் அவளறியாமல் 
கொன்று போட்டதோ? 

அழகான வீடு 
அன்பான மக்கள்
தெய்வீக பூஜைகள் 
இனிமையான பாடல்கள்
மலர்கள் தரும் தோட்டம் 
மனம் விரும்பும் அமைதி 
உப்பு சரியாய் உணவு
உடல் நலிவில் பத்தியம்
மென்மையான தலைகோதல்
நள்ளிரவின் அணைப்புகள்
நிம்மதியான உறக்கம்  
நேர்த்தியான உடைகள்
மிளிரும் காலணிகள்
பாதுகாப்பான பயணங்கள் 
நிறைந்த சேமிப்பு  
வாழ்த்து அட்டைகள்
பிறந்தநாள் பரிசுகள்
விருந்தினர் உபசரிப்பு
பிள்ளைகள் படிப்பு
நிஜமான நேசம்  
கள்ளமில்லா சிரிப்பு 
சோர்ந்தபோது ஆறுதல்
குற்றமில்லா நட்பு
குறையில்லா வாழ்க்கை
ஒரு கோப்பை தேநீர் 
ஒன்றுக்கு கூட
நன்றி சொன்னதில்லை 
நான் அவளுக்கு.. 

வேலைக்காரியாய் வாழ்ந்துவிட்டாள் 
என்றே நினைத்திருந்தேன்
பொய்த்துவிட்டது நினைவுகள்
என் தாயை இழந்துவிட்டேன்
மீண்டும் ஒருமுறை

மனைவி என்னும் மந்திரத்தால்
ஒரு தேவதையை வசப்படுத்திய 
மோசமான மந்திரவாதி நான் 

அவளுக்கான என் தேடல்கள்
காயப்படுத்த போவதில்லை என்னை
ஆனால்..
அவள் விட்டுச்சென்ற தடங்கள்..?
இழப்பெல்லாம் கணக்கெடுக்க 
என் ஆயுள்கூட போதாது 
கண்ணீர் கண்ணிமைகளை தாண்டுகிறது 
அமைதியாய் இருக்கிறாள் அவள்
எப்பொழுதும் போலவே என்னெதிரில்..

உணர்ந்து பேச ஓராயிரம் இருக்கிறது
என் ஒருவார்த்தை மன்னிப்பை கேட்க 
அவளில்லை இன்று
காலம் கடந்த ஞானங்களில்
தத்துவங்கள் பேசவில்லை
தவறவிட்டவனின் தப்புசெய்தவனின் 
பாவமன்னிப்பு வரிகள்..

இனி வாழ்வதற்கு  
அவளில்லை என்றபோதும்
வாழ்ந்துவிடவே எத்தனிக்கிறேன்
கனவுகளிலாவது அவள் கைக்கோர்த்து
இத்தனை நாள் என்னுடன் 
அவள் வாழ்ந்தது போலவே..
என்றேனும் அவள் 
கேட்கக்கூடும் நான் பேசுவதை..  

அவரா இவர்?!


ரோஜாபூவை அவர் நீட்டிய தினம்
அடடா!
என்றும் மறக்காது
இதோ.. ஒருமுழம் மல்லிகைக்காய்
மன்றாடியபடி நிற்கிறேன்..
இன்றைக்கு தேவை இல்லையாம்..!!!

கடலை பார்த்து கவிதை சொல்லி
சுண்டல் தின்று.. சுகமாய் மடி சாய்ந்து 
கால் நனைத்த ஈரம் காய்ந்துவிட்டது 
இப்போதெல்லாம் கடற்கரை பார்ப்பது 
செய்திதாள்களில் மட்டுமே..  

ஊர் சுற்றிய காலங்களில் 
உணவு விடுதிகளில்.. 
நான் விரும்பிய உணவை 
அவரும் சாப்பிட..
இந்நாளின் சமையல்களில்  
அவர் விரும்பும் உணவுகள் மட்டுமே..
என்றாலும்.. நான் சாப்பிட்டேனா 
என்ற கேள்வி கேட்கப்பட்டதே இல்லை..

வயிற்று வலியோடு துடிக்கையில்
கல்லூரி விடுதிக்கு வந்து பார்த்து
வெந்தயத்தை நீட்டிவிட்டு சென்றார்..
மூன்று நாளின் முதல் நாளில் 
அணைக்கமுயன்று வில(ள)க்கபட்டபின்..
வெடிக்கிறது கோவம் அவர் முகத்தில்..
இன்றைய நாள் இனிதாக இல்லை..

அன்றெல்லாம்.. 
ஆசையாய் பேசி முகம் நோக்கி 
காதலை மட்டுமே உணரசெய்த விழிகள்..
கனலை கக்குகின்றன இன்று 
வரவுசெலவு கணக்குகள் சொல்லும் போது 
கூடுதலான செலவுகளுக்கு பதிலாய்
குடும்பசங்கத்தின் அப்பாவி உறுப்பினராய் நான்..

"உனக்கு பிடித்த பாடல்களை கேட்க.." 
கண்முன்னே நீட்டினார்  
பிறந்தநாள் பரிசாய் சிறிய வானொலியை  
கடவுளுக்கு நன்றி சொன்னேன்..
என் ரசனைகளை ரசிக்கும் அவருக்காய் 
காலங்கள் கடந்த வேளையில் 
மறந்தே போனார் என் பிறந்தநாளை 
கடவுளுக்கு என்ன சொல்லட்டும் இப்போது?! 

பேருந்து பயணங்களில் 
ஒரு முத்தமிட அவர் அனுமதி கேட்டதும்
தயங்கியபடி இட்ட திருட்டு முத்தமும்..
இன்றும் தித்தித்தபடி
அனுமதியும் விருப்பங்களும் தொலைத்த முத்தங்களே 
தொடருகின்றன இப்பொழுதெல்லாம் 

வேலை முடித்து வியர்வையுடன் 
ஆயாசமாய் அருகில் அமர்கையில்
அன்பு மறந்து அருவருக்கிறார் 
புகையும் மதுவுமாய் 
போதையில் அவர் அணைத்த வேளையில் 
எதை நான் மறந்திருக்க வேண்டும்?!  

நிறைய எழுதலாம் தான்..
காதல் நாட்களை பற்றியும் 
கல்யாணத்திற்கு பின்வந்த நாட்களை பற்றியும்  
இருந்தாலும்.. 
அவர் வரும் நேரமாயிற்றே என்ற பதட்டத்தில்
நிறுத்தி வைக்கிறேன் என் எழுத்துக்களை 

நீண்ட பெருமூச்சின் நடுவே தோன்றுகிறது
அவரா இவர்?!
இருக்காது.. இருக்கவே இருக்காது!!!


Related Posts Plugin for WordPress, Blogger...