நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

28 July 2011

உன் நினைவுகளின் நெரிசலில்


உன் நினைவுகளின் நெரிசலில் 
சிக்கி தவிக்கும் வாகனமாய் 
என் இதயம் 

வயதான தம்பதிகளை கடக்கையில்
நம்மை ஒப்பிட்டு பார்க்கிறேன்
எவ்வளவு வயதானாலும்
சிறு குழந்தையெனவே நீ
நடக்கிறாய் என்னருகினில் 
இறுக்கமாய் கைகளை பிடித்தபடி

எதிர்படும் குழந்தைகள்
சிரித்து போகிறார்கள்
உன்னை பார்த்து மட்டும்

பேசிக்கொண்டே நடக்கிறாய்
யார் மீதும் இடிக்காமல்
அப்படியே நடக்க முற்பட்டு
இடித்துக்கொள்கிறேன் உன் வார்த்தைகளில்

உன்னுடன் நடக்கையில் மட்டும்
தூரங்கள் குறைகின்றன
என் துன்பங்களும் தான்

திடீரென என் மீது
பட்டு நகர்கிறாய்
அப்பொழுதெல்லாம் தாண்டுகிறேன் 
சாலைகளின் எல்லைக்கோடுகளை


ஏதேனும் வாங்கவேண்டுமா
என்று கேட்கையில்
இல்லை என்னும் 
உன் ஒருநொடி பார்வையில்
எதிர்வரும் வாகனங்களும்
நின்று செல்கின்றன

சாலை ஓர மரங்களெல்லாம் 
பூக்களை உதிர்கின்றன
நீ கடந்து செல்கையிலே
என்றாலும்..  
ஓரமாய் நடக்கிறாய்
அவற்றைக்கூட காயப்படுத்தாமல்

தினம் நடக்கும் பாதையிலே
உனக்கு தெரிந்தவர்களாய் 
ஓராயிரம் மனிதர்கள்
யாருமே தெரிந்ததில்லை 
என் கண்களுக்கு
உன்னை தவிர


சும்மா நடக்கும் வேளையிலும்
உதவி போகிறாய்
பல உயிர்கள் வாழ்வதற்கு 
நானும் வாழ்கிறேன்
உன்னுடன் நடக்கையில் மட்டுமே 

*******************************************************************************
வாகனஓட்டிகள் உன்னை கண்டதும் 
நிற்கிறார்கள் 
உன்னுடன் இருக்கும் என்னை 
கவனிக்கிறார்கள்
உடனே 
செல்கிறார்கள்
ஏக்கமான கண்களையும்
ஏமாற்றமான இதயத்தையும் 
அபராதமாய் செலுத்தியபடி  

*******************************************************************************

22 July 2011

வேலைக்கு நேரமாச்சு


எனை கொல்லும் பல நேரங்கள்
நான் வெல்லும் சில நேரங்கள்
திறமை காட்டி எடுக்கப்படும்
பிச்சையென மாத சம்பளம்

ஏறுவதிலுள்ள சிரமம்
இறங்குவதில் இல்லை
வனம் தொலைத்த தேவதையாய்
எனை நானே தொலைக்கிறேன்

உறக்கத்திற்கு ஏங்கும் விழிகள் 
ஆடைகளுடன் ஐக்கியமாகிவிட்ட கைகள்
மரத்துப்போன சதையாய் இதயம்
மூடியே இருக்கும் மூளையின் மடிப்புகள்

பயணங்களில் புத்தகங்கள்
ஆனால், மனிதர்களை மட்டுமே படித்தபடி 
எதிர்ப்படும் மனித முகங்கள்
நானே தானா?
 
வெப்பத்துடனும் மழையுடனும்
நீளும் என் தீண்டுதல்கள்
உடையும் நீர்குமிழிகளாய்  
என் கண்களிலே
 
நிறுத்த முடியாத 
நீண்ட ஒரு பயணமாய் கற்பனைகள்
பெண்மைக்கான நாட்களிலும்
எதை மாற்றவும் நேரமின்றி

ஓடவும் நிற்கவும் 
அதுவே இயலாத கடிகாரமென 
வாழ்க்கை அமைந்த பின்
 
ஒரே கையென 
யானை சுமக்கும் தும்பிக்கையாய்
நானும் சுமக்கிறேன் நம்பிக்கையை   

Related Posts Plugin for WordPress, Blogger...